Thursday, August 25, 2016

கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டால், நாம் அறியாத, எட்டாத, பெரிய காரியங்களை செய்வார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title:கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டால், நாம் அறியாத, எட்டாத, பெரிய காரியங்களை செய்வார்
Date: 21:08:2016
Speaker: Pastor Micheal

Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டால், நாம் அறியாத, எட்டாத, பெரிய காரியங்களை செய்வார் "

எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

ஆண்டவரை நோக்கிக் கூப்பிடு, கர்த்தர் சொல்லுகிறார் நீ என்னை நோக்கிக் கூப்பிடு, நீங்கள் கூப்பிட்டால் ஆண்டவர் உத்தரவு கொடுப்பார். உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உத்தரவு கொடுக்கிறார் என்று சொன்னால் நீங்கள் அறியாததும், நம் புத்திக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வார்.

கர்த்தரை நாம் எப்படியெல்லாம் நோக்கிக் கூப்பிடலாம் என்று இங்கே மூன்று விதமான முறையில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கூப்பிடலாம்.

1. அப்பா பிதாவே என கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும்
2. கர்த்தரை எஜமானராய் நோக்கிக் கூப்பிட வேண்டும்
3. கர்த்தரை சர்வ வல்லமையுள்ளவராய் நோக்கிக் கூப்பிட வேண்டும்

நம் ஆண்டவர் நமக்கு எப்படி இருக்கிறார் என்றால் அப்பா பிதாவாக இருக்கிறார். நாம் அவருக்கு பிள்ளையாய் இருக்கிறோம். நீங்கள் என்ன கேட்டாலும் சரி, அப்பா கொடுத்துதான் ஆக வேண்டும்.

கர்த்தர் நமக்கு எஜமானராயிருக்கிறார் இந்த அகில உலகத்திற்கும் கர்த்தர் ஒருவரே எஜமானராக திகழ்கிறார். நம் வாழ்க்கையில் என்னென்ன இடர்பாடுகள், சறுக்கல் வந்தாலும் சரி கர்த்தர் கைவிடமாட்டார், உன் மேல் கண்ணை வைத்து அவற்றிலிருந்து விடுபட உனக்கு ஆலோசனை சொல்லுவார்.

கர்த்தர் சரவ வல்லமையுள்ள தேவன். மூன்றாவதாக கர்த்தரை நோக்கி எப்படி கூப்பிட வேண்டுமென்றால், இந்த உலகத்தையேப் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனே என்று நாம் ஜெபம் செய்ய வேண்டும். அவர் இயற்கைக்கு அப்பாற்ப்பட்டவர் வல்லமையுள்ள தேவன் நம் தேவனாகிய கர்த்தர்.
1. அப்பா பிதாவே என கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும்

மத்தேயு 6:6
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

மத்தேயு 6:7
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

மத்தேயு 6:8
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நம் தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நம்மிடையே இப்பொழுது ஆவியானவராய் இருக்கின்றார். அந்தரங்கத்தில் உள்ள நம் பிதாவை நோக்கி ஜெபிக்கும் பொழுது, அவர் நமக்கு வெளியரங்கமாய்ப் பலனை அளிக்க வல்லவராயிருக்கிறார்.

நீங்கள் ஜெபிக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு ஜெபிக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பொழுதே நமக்கு இன்னது தேவை என்பதை நம் பிதா அறிந்திருக்கிறார்.
2. கர்த்தரை எஜமானராய் நோக்கிக் கூப்பிட வேண்டும்

லூக்கா 12:37
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 12:38
அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.

எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 

அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.

சங்கீதம் 123:2
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள். அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம். நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.

இவ்விதமாய் நம் தேவனாகிய கர்த்தரை எஜமானராக நோக்கி கூப்பிடும் பொழுது மெய்யாகவே நமக்கு பலனளிப்பார்.

3. கர்த்தரை சர்வ வல்லமையுள்ளவராய் நோக்கிக் கூப்பிட வேண்டும்
கர்த்தர் பார்த்தால் வல்லமை, அவர் நடந்தால் வல்லமை, அவர் பேசினால் வல்லமை, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது ஆவியின்  வல்லமை, அவர் மகிமையின் மேகங்களோடு வல்லமையோடு இறங்கி வரப் போகிறார். அப்படி வல்லமை உள்ள தேவனை நாம் வணங்குகிறோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

சங்கீதம் 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

சங்கீதம் 65:3
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.

நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.

அவர் பாவமே அறியாதவர் ஆனால் நம்முடைய பாவங்களை சுமந்து சிலுவைக்கு தன்னை ஒப்பு கொடுத்தார். கர்த்தர் ஒருவரால் மட்டுமே நம்முடையப் பாவங்களை போக்க முடியும்.

நாம் அகலப் பாதாளத்திலே விழுந்தாலும் சரி, அப்பா பிதாவே, எஜமானரே அல்லது சர்வ வல்லவரே நான் உங்களை நேசிக்கின்றேன் என்று சொன்னால் போதும். கர்த்தர் உங்களை தூக்கிவிடுவார். கர்த்தருடைய அன்பையும், கிருபையையும் என்றுமே விட்டு விடக் கூடாது.

சங்கீதம் 93:4
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.

சங்கீதம் 59:9
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

அந்த வல்லமைக்காக நாமெல்லாரும் காத்திருக்க வேண்டும். அத்தகைய வல்லமையைப் பெற நாம் நிலையான விசுவாத்தோடு ஜெபிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது நம் பிதாவனிடத்தில் இருந்து யாவற்றையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment