Tuesday, July 4, 2017

நான் உன்னோடேகூட இருப்பேன்


கன்மலை கிறிஸ்துவ சபை 
02.07.2017

" நான் உன்னோடேகூட இருப்பேன் "

ஆதியாகமம் 31:3
கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.

நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். இந்த ஏழாம் மாதமான ஜூலையில் துவக்கம் முதல் முடிவு மட்டும் கர்த்தர் சொல்லுகிறார் அவர் முடிவுப்பரியந்தம் நம்மோடு இருப்பவர் தான் ஆனாலும் இந்த மாதத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் நான் உன்னோடே கூட இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


யாக்கோபு பல சூழ்நிலையின் நிமித்தமாக அவன் ஏசாவுக்கு தப்பி வனாந்திர வெளியிலே சுற்றி திரிந்து வருகிறார். எங்கே போவது தெரியாமல் அழுது துக்கித்து சஞ்சல பட்ட ஒரு நேரம் அது.  அந்த இடத்தில் கர்த்தர் யாக்கோபை பார்த்து சொன்னார் உன் இனத்தான் வீட்டுக்கு போ. இந்த வசனத்தில் நாம் கடைசி பகுதியை தியானிப்போம் நான் உன்னோடே கூட இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் சரி, அது எந்த காரியமாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் இந்த ஏழாம் மாதத்தில் கர்த்தர் சொல்லுகிறதாவது நான் உன்னோடு கூட இருப்பேன். 

நம் தேவனாகிய கர்த்தர் உன்னோடு கூட இருந்து செய்ய கூடிய நான்கு விதமான காரியங்களை நாம் இங்கு பாப்போம். 

அவர் எப்படியெல்லாம் நம்மோடு கூட இருக்க போகிறார் ?

1. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு கூட இருப்பார்

யோசுவா 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

இந்த மாதத்திலே நீங்கள் எங்கெல்லாம் கால் எடுத்து வைக்கிறீர்களோ, எங்கெல்லாம் நீ பேசுகிறாயோ, எந்த இடத்தில் எல்லாம்  நீ இருக்கிறாயோ, எல்லா இடங்களிலும் கர்த்தர் உன்னுடனே கூட இருப்பார். கர்த்தர் சொல்லுகிறார் இந்த மாதத்தில் நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் கர்த்தர் உன்னோடே கூட இருக்கிறார். எதற்காக என்றால் நீ துன்பத்தில் சிக்காமல் இருக்கும் படி, நீ ஆபத்தில் சிக்காமல் இருக்கும்படி, நீ கலங்கும் நேரத்தில் உன் கண்ணீரை துடைக்கும் படி, எல்லா இடங்களிலும் கர்த்தர் உன்னுடனே கூட இருப்பார். 

2. உன்னோடு கூட இருந்து பெலப்படுத்தி சகாயம் செய்வார்

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

போன மாதத்திலே எதில் எல்லாம் நாம் பெலவீனமாய் இருந்தோமோ, இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை பெலப்படுத்தி  உன்னை சீராய் நடத்த கர்த்தர் உனக்கு சகாயராய் இருப்பார். நம்முடைய காரியங்களில் எதில் எல்லாம் நாம் பெலவீனப்பட்டு இருந்தோமோ எல்லாவற்றிலும் கர்த்தர் உங்களை பெலப்படுத்தி உங்களுக்கு சகாயம் செய்ய கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். 

யோசேப்புடைய வாழ்க்கையில் அவன் பெலவீன பட்டது எல்லாம் யாராலே என்று கேட்டால் அவன் குடும்பத்தினால தான்.இருந்தாலும் கர்த்தர் யோசேப்போடே கூட இருந்து அவருக்கு சகாயம் செய்து கொண்டே இருந்தார். யோசேப்பு செய்த எல்லா காரியத்திலும் கர்த்தர் அவரோடே கூட இருந்தார். யோசேப்பு எகிப்த்துக்கு விற்கப்படுகிறார் ஏன் ஒரு இடத்தில் இருந்து  மற்றொரு இடத்திற்கு தன் தாசனை அனுப்புகிறார் என்று கேட்டால் அந்த தேசத்தில் வரப்போகும் பஞ்சத்தின் காரணமாக தான். வசனம் சொல்கிறது சிங்க குட்டிகள் தாழ்ச்சி அடைந்தாலும் கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவு படாது. உன் சத்ருவிடம் இருந்து பிடுங்கி கர்த்தர் உனக்கு தருவார்.


யோசேப்பை கர்த்தர் எகிப்த்திலே உயர்த்தினார். கடைசியில் அவர் குடும்பத்தாரை சந்திக்கும் பொழுது யோசேப்பு எதுவும் சொல்லவில்லை நீங்கள் எவ்வளவோ எனக்கு தீங்கு செய்தீர்கள் அவை எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாய் மாற்றி விட்டார். யோசேப்புக்கு கர்த்தர் எல்லா விதத்திலும் உதவி செய்து கொண்டே இருந்தார். உங்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார் நீ பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன். 

3. உன்னோடு கூட இருந்து உன்னை காப்பாற்றுவார் 

எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

எரேமியா 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

கோலியாத்தை பார்த்து இஸ்ரவேல் அஞ்சியது சவுலும் அவன் சேனைகளும் அவனை எதிர்ப்பதற்கு பயந்தார்கள். அப்பொழுது தன் அண்ணனுக்கு சாப்பாடு கொடுக்க தாவீது அங்கு வருகிறார். தாவீது எப்பொழுதும் கர்த்தரை ஆராதனை செய்பவர். அதே தேவ பிரசன்னத்தோடு அங்கு வருகிறார். ஆடு மேய்த்த இடத்தில் இருந்து கர்த்தரை துதித்து விட்டு முழு பெலத்தோடு வருகிறார். தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்று கூறி ஐந்து கல்லில் ஒரே ஒரு கல்லை மட்டும் தான் எடுத்தார். கோலியாத்தை நோக்கி எறிந்தார் அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.  கர்த்தர் தாவீதோடே கூட இருந்தார். அவர் கோலியாத்தை முறியடித்தார்.

அதுபோல கர்த்தர் உன் கூட இருப்பதினால் எப்பேர்ப்பட்ட சத்ரு வந்தாலும் அதை மேற்கொள்ள உங்களுக்கு பெலன் தருவார். நீங்கள் யாருக்காகவும் பயப்படவேண்டாம் ஒரு மனுஷரும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு சேனையே வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வசனம் தெளிவாய் சொல்கிறது நீ அவர்களுக்கு பயப்படவேண்டாம். உன்னை காக்கும் படி நான் உன்னுடனே கூட இருக்கிறேன். இந்த மாதத்தில் உன்னை காக்கும் படி, உன் குடும்பத்தை காக்கும் படி, உன் பிள்ளைகளை காக்கும் படி, எல்லா விதத்திலும் நான் உங்களோடு கூட இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

4. சகல நாட்களிலும் உங்களோடு கூட இருப்பார் 

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

No comments:

Post a Comment