Tuesday, August 8, 2017

நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்

கன்மலை கிறிஸ்துவ சபை 
6.08.2017

நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்

சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

இங்கே தாவீது தன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி இருப்பதையே நான் நாடுவேன் என்று சொல்லுகிறார். ஆம் நாம் பரிசுத்த ஒய்வு நாளில் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனையில் தவறாமல் வர வேண்டும். நம்மை ஆசிர்வதிக்கும்படி தான் கர்த்தர் ஒய்வு நாளை உண்டாக்கி இருக்கிறார்.

சங்கீதம் 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

1. ஏன் நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு வர வேண்டும் ?

சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு வர வேண்டும் என்று சொன்னால் நமக்கு மிகுந்த கிருபை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் இந்த உலகத்தில் அநேக விதமான காரியங்கள், வேலைகள், பொழுது போக்குகள், சிற்றின்பங்கள் ஆலயத்திற்கு வரக்கூடாதபடிக்கு பிசாசானவன் இவ்விதமான காரியங்களை தந்து ஆலயத்திற்கு போகக்கூடாதபடிக்கு சூழ்நிலையை ஏற்படுத்துகிறான். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து பயபக்தியுடன் வாழவே நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம். பய பக்தியுடன் அவர் சந்நிதிக்கு வந்து நாம் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும். அப்படி ஆலயத்திற்கு வரும் மிகுந்த கிருபையை கர்த்தரிடத்தில் நாம்  கேட்க வேண்டும். 

சங்கீதம் 5:8
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

மாற்கு 2:27
பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;

மாற்கு 2:28
ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு வருவது தான் நீதி, அப்பொழுது தான் உன் வழி செவ்வை படுத்தப்படும் இந்த நீதியை நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 

2. எப்படி  நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு வர வேண்டும் ?

அப்போஸ்தலர் 3:1
ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.

பேதுருவுக்கும், யோவானுக்கும் அநேக விதமான வேலை பல இருந்தன ஆயினும் அவர்கள் ஜெப வெளியாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே தேவாலயத்திற்கு புறப்பட்டுப்போனார்கள்.

அப்போஸ்தலர் 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

அப்போஸ்தலர் 3:3
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.

அப்போஸ்தலர் 3:4
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

அப்போஸ்தலர் 3:5
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

அப்போஸ்தலர் 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

அப்போஸ்தலர் 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

பேதுருவும், யோவானும் ஆலயத்திற்கு வழக்கமாய் போவது மட்டும் அல்லாமல் அவர்கள் சாட்சியாய் இருந்து  தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனை இயேசுவின் நாமத்தில் சுகம் தந்தனர். அந்த மனுஷன் பின் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அதுபோல நாமும் பேதுருவும், யோவானை போல மற்றவர்களுக்கு சாட்சியாய் இருந்து அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் விடுதலை தந்து அவர்களை கர்த்தருக்குள் வழிநடத்தி அவர்களை சபைக்கு கூட்டி வர வேண்டும்.


3. எதற்கு நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு வர வேண்டும் ?

ஆலயத்திற்கு வருவதால் நன்மை கிடைக்கும் 

சங்கீதம் 65:4
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு வருகிற நாம் எல்லோரும் பாக்கியவான்கள்.அவ்வாறு நாம் வருவதால் நம் தேவனாகிய கர்த்தருடைய ஆலயமாகிய அவரது வீட்டின் நன்மையால் திருப்தி ஆவோம். கர்த்தருடைய வார்த்தை தான் நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகள். நீ ஜீவனுள்ள நாளெல்லாம் நீ எருசலேமின் வாழ்வை காண்பாய். அவர் நன்மையும், கிருபையும்  உன்னை பின்தொடரும். நீ எதிர்பார்த்து இருக்கிற நன்மையை கர்த்தர் உனக்கு செய்வாராக.  

மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். கர்த்தருடைய ஒவ்வொரு வார்த்தை தான் நம்மை  வாழ வைக்கும், நம்மை தேற்றும், நம்மை செவ்வை படுத்தும். நம்மை பெலப்படுத்தும். அந்த வார்த்தை ஆகிய நன்மையை பெற்று கொள்ள நாம் தவறாமல் சபைக்கு வர வேண்டும். நம் தேவைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார். நாம் ஆலயத்திற்கு வரும் பொழுது ஆவியானவர் நம்முடன் பேசுவார்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு மகிழ்ச்சியாய் வர வேண்டும் 

சங்கீதம் 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

ஒரு மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கனும். ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று சொல்லும் பொழுது ஒரு மிகுந்த மகிழ்ச்சி உனக்குள்ளே ஆட்கொண்டு என் ஆண்டவரை நான் பார்க்க புறப்படப்போகிறேன் என்று நாம் ஆலயத்திற்கு வர வேண்டும். 

மல்கியா 3:1
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த பகுதியை வாசிக்கும் பொழுது நாம் ஆலயத்திற்கு வருவதற்கு முன்பாகவே பாதையை செவ்வை பண்ணும் படி கர்த்தர் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு அவர் அனுப்புகிறார்.   வேதம் சொல்கிறது ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும். ஏனென்றால் அவர் தம்முடைய ஆலயத்திற்கு தீவிரமாய் வருகிறார். நீங்கள் ஆலயத்தில் வந்து எதை வேண்டி கொள்கிறீர்களோ அதை கர்த்தர் உடனே வாய்க்கப்பண்ணுவார்.

ஆலயத்திற்கு வருவதால் வற்றாத ஜீவ ஊற்றை பெறுவோம் 

யோவேல் 3:18
அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

ஆலயத்தில் ஒரு ஊற்று உண்டு. அந்த ஊற்று பள்ளத்தாக்கை எப்படியாகும் என்று கேட்டால் யார் அந்த பள்ளத்தாக்கு நீயும், நானும் தான். இந்த ஊற்று கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து புறப்படும். ஆண்டவரை ஆராதிக்கிற வேலையிலே , அவர் வசனத்தை சொல்லுகிற வேலையிலே, அவரை பாடுகிற வேலையிலே யார் வாஞ்சையாய் தாகத்தோடு உள்ளவர்களை  அந்த ஊற்று நிரப்பும்  இந்த ஊற்று வானத்தில் இருந்து புறப்பட்டு வருகிற என் ஆண்டவராகிய ஜீவ ஊற்று. இந்த ஊற்று சபைக்கு வருகிற தம் ஜனங்களுக்கு எதிர் பார்த்து இருக்கிற அற்புதங்களும், அதிசயங்களும், அபிஷேகமும் அவர்களுடைய வாழ்க்கையில் வந்து நிரப்பும். அது உன்னை செழிக்க வைத்து நீர்பாய்ச்சல் ஆக்கும். உன் வாழ்க்கையில் எதெல்லாம் வறண்டு போய் உள்ளதோ இந்த ஊற்று வாரா வாரம் நீ ஆலயத்திற்கு வரும் பொழுது இந்த ஊற்று உன் மீது பட பட நீ செழித்திருப்பாய். 

ஆலயத்திற்கு வருவதால் கர்த்தருடைய மகிமையை காணலாம் 

எசேக்கியேல் 43:5
அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

சங்கீதம் 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. 

சங்கீதம் 24:7
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.

சங்கீதம் 24:9
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 24:10
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. 

இந்த மகிமையே இயேசு கிறிஸ்து தான். ஆலயத்திற்கு வருவதால் தேவனுடைய மகிமையை நாம் பார்க்க முடியும். 

முதிர் வயதானாலும் தவறாமல் சபைக்கு வர வேண்டும் 

முதிர் வயதாய் இருந்தாலும் நாம் சபைக்கு வருவதை விட்டு விடக்கூடாது. இங்கும் அன்னாள் என்கிற தீர்க்கதரிசி எண்பத்துநாலு வயதை கடந்த போதிலும் அவர்கள் தன் வயதின் முதிர்ச்சியால் ஏற்படும் பெலவீனங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக, ஒரு தாகத்தோடு, வாஞ்சையோடு, ஆலயத்திற்கு வந்தாள். 

லூக்கா 2:36
ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்

லூக்கா 2:37
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

லூக்கா 2:38
அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.

இந்த தீர்க்கதரிசிக்கு உள்ளே இருந்த  ஆர்வம் என்ன வென்று சொன்னால் என் ஜனங்கள் மீட்கப்பட வேண்டும் என்ற தாகம் உடையவராக இருந்தார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவள் ஆலயத்திற்கு வருவதை விடவில்லை. நாமும் சபைக்கு அவர்களை போன்ற தாகத்தோடு வர வேண்டும். தவறாமல் வர வேண்டும். குடும்பத்தோடு வரவேண்டும். வசனம் சொல்கிறது நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம். நாம் குடும்பத்தோடு சபைக்கு வர வேண்டும்.  

ஆலயத்தினுடைய பிரமாணம் என்ன ?

எசேக்கியேல் 43:12
ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.

ஏன் தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று சொன்னால் ஆலயத்தின் எல்லா பகுதிகளும் பரிசுத்தம் நிறைந்து இருக்கும். தேவதூதர்கள் வருகிற இடம். தேவனுடைய மகிமை இறங்கும் இடம். ஏன் நாம் ஆலயத்திற்கு வர வேண்டும் என்றால் நாம் என்னதான் பரிசுத்தமாக வாழ முயற்சித்தாலும் அது முடியாது நீங்கள் மாம்சத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் நாம் ஆலயத்திற்கு வந்தால் தான் முடியும். 

அப்படி ஆலயத்தில் வந்தால் கர்த்தர் என்ன செய்வார் ?

இங்கே நாம் ஒரு நிகழ்வை வேதத்தில் இருந்து காண்போம். இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் பிரவேசிக்கும் பொழுது அவர் அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷனுக்கு விடுதலை தருகிறார். அவன் வியாதிபட்டு இருந்த பொழுதும் அவன் ஆலயத்திற்கு வந்து இருந்தான். அவன் தன் வியாதியையும் பாராமல் ஆலயத்திற்கு வந்த படியால் அது ஒய்வு நாளாய் இருந்த போதிலும் இயேசு அந்த மனுஷனுக்கு சுகம் தந்தார். 

மாற்கு 3:1
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.

மாற்கு 3:2
அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

மாற்கு 3:3
அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;

மாற்கு 3:4
அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

மாற்கு 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

தேவ ஆலயத்திலே கர்த்தர் எப்பொழுது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சுகம் தர வல்லவராய் இருக்கிறார், அவர் குறித்த நாளிலே அவர் நிச்சயம் சுகம் தந்து விடுதலை அளிப்பார். உன் வாஞ்சை, உன் கிரியை, உன் கண்ணீர், உன் எண்ணம் எல்லாம் உண்மையாய் அவர் ஆராய்ந்து அறிந்து நீயும் அவரும் ஒருமன படும் பொழுது அது எந்த வியாதியாய் இருந்தாலும் கர்த்தர் சுகம் தருவார். அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு சபைக்கு நாம் தவறாமல் வந்து கர்த்தருடைய கிருபையையும், நன்மையையும், பெற்றுக்கொள்ளக்கடவோம் நாம் தாவீதை போல ஜீவனுள்ள நாளெல்லாம் ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவோம் ஆமென். 


FOR CONTACT 
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment